1.7.06

பத்திர பதிவு

'நிலம் கையகப்படுத்துதல்' சம்பந்தமாக சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயத்தை விட்டு சற்று விலகி இருப்பது எனக்குத் தோன்றுகிறது. அஹ¤ஜா இண்டஸ்டிரீஸ் லிமிடெட் எதிர் கர்நாடக அரசு (JT 2003 (3) SC 566) என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், நான் சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனம் கூட இரு வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு சட்டக் கூற்றினால் பாதிக்கப்பட்டாலும்....எனக்கு நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் எடுத்துக் கொண்ட நிலையுடன் இசைய முடியவில்லை.

முதலில் நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? அரசுக்கு பல சமயங்களில் தனியார் வசம் உள்ள நிலம் தேவைப்படுகிறது. அவ்வாறாக தேவைப்படும் சமயங்களில் அரசு 'நிலம் கையகப்படுத்துதல் சட்டம்' (Land Aquisition Act) மூலம் உரிமையாளருக்கு அறிவிப்பு கொடுத்து நிலத்தை தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும். நில உரிமையாளர்கள் பொதுவாக இதனை ஆட்சேபிக்க வேண்டுமானல், ஏதாவது நுட்பமான காரணங்களை வைத்துதான் ரிட் மனு தாக்கல் செய்ய இயலும். ஆனால் இவ்வாறு நிலத்தை கையகப்படுத்துவதற்கு அதன் உரிமையாளருக்கு நிலத்தின் சந்தை விலையை நஷ்ட ஈடாக தர வேண்டும். மேலும் இவ்வாறு கட்டாயமாக பிடுங்கிக் கொள்வதால் சந்தை விலையோடு மேலும் ஒரு முப்பது சதவீதம் சேர்த்து தரவேண்டும். (இதனை ஆங்கிலத்தில் solatium என்பார்கள்)

நிலத்தை கையகப்படுத்தும் முன்னர் அறிவிப்பு தரப்பட வேண்டும். அறிவிப்பினை பெற்ற உரிமையாளர் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியிடம் சென்று தனது ஆட்சேபங்களை தெரிவிக்கலாம். பொதுவாக அந்த அதிகாரி ஆட்சேபங்களை தள்ளுபடி செய்து கையகப்படுத்துதலுக்கான நஷ்ட ஈட்டினை நிர்ணயிப்பார். அந்தத் தொகை நிலத்தின் உரிமையாளர், அதிகாரியின் அலுவலகம் சென்று வந்த பேருந்து கட்டணத்திற்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கும். உரிமையாளர் நஷ்ட ஈட்டினை ஆட்சேபித்தால், அதிகாரி அவராகவே பிரச்னையினை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புவார். அங்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அருகே சமீபத்தில் விற்கப்பட்ட, வாங்கப்பட்ட நிலங்களின் விலையை கருத்தில் கொண்டு கையகப்படுத்தப்படும் நிலத்தின் சந்தை விலையை நிர்ணயிப்பார்கள். இவ்வாறாக நீதிமன்றம் சென்று சந்தை விலையை நிர்ணயிக்காத பட்சத்தில்....அதிகாரி நிர்ணயிக்கும் நஷ்ட ஈட்டுடன் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

அஹ¤ஜா இண்டஸ்டிரீஸ் என்ற நிறுவனம், 1993ம் வருடம் கர்நாடகத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுமார் ஒன்றரை ஏக்கம் நிலம் வாங்கியது. பத்திரமெல்லாம் எழுதி பதிவாளர் அலுவலகத்தில் பதிந்தாயிற்று. இவ்வாறு பதிவதை ஒருவர் நிலத்தை வாங்கியதை உலகம் முழுவதும் தெரியப்படும் அறிவிப்பு என சட்டம் கருதும். அதாவது, இன்னாருடைய நிலத்தை இன்னார் இன்ன தேதியில் கிரயத்திற்கு வாங்கியிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். அந்த நிலத்தை வாங்க விரும்பும் வேறு எவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனுச் செய்து அந்த நிலம் யாருக்கு சொந்தம், யாருக்காவது அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என சட்டம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு தெரிந்து கொள்வதற்கு நாம் விண்ணப்பிக்கும் சான்றிதழைத்ததன் வில்லங்க சான்றிதழ் என்கின்றனர்.

ஆனால் அஹ¤ஜா இண்டஸ்டிரீஸ் இவ்வாறு நிலம் வாங்கும் பலர் செய்யும் ஒரு தவறினைச் செய்தது. அதாவது நிலவரி வசூலிப்பதற்காகவும், நில அளவைக்காகவும் (சர்வே) அரசாங்க வருவாய் துறை அலுவலகத்திலும் ஒரு ஆவணம் இருக்கும். அங்கும் நிலத்தின் உரிமையாளர் யார் என்ற விபரம் எழுதப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு சொத்தினை வாங்கியவுடன் வருவாய் துறை அலுவலகங்களிலும் மனுச் செய்து பழைய உரிமையாளர் பெயரை அடித்து புதிய உரிமையாளர் பெயரை பதிந்து கொள்ளலாம். இதனால் நிலவரி அறிவிப்புகள் புதிய உரிமையாளரின் பெயருக்கு வரும். அஹ¥ஜா இண்டஸ்டிரீஸ் இவ்வாறு வருவாய் அலுவலகத்தில் தனது பெயரினை பதியவில்லை. பட்டா என்று பலரால் விளிக்கப்படும் ஆவணம், இந்த வகையான வருவாய் துறையின் ஆவணம்தான். பட்டா என்பது நில வரியை வசூலிப்பதற்கான ஒரு ஆவணமே தவிர, சொத்துரிமைக்கான ஆவணம் அல்ல.

வருவாய் அலுவலகத்தில் தனது பெயரை பதியாமல் போனதற்காக அஹ¥ஜா இண்டஸ்டிரீஸையும் தவறு சொல்ல முடியாது. ஏனெனில் கர்நாடக வருவாய் துறை விதிகளின்படி பதிவாளர் அலுவலகமே ஒவ்வொரு பத்திர பதிவிற்கும் பிறகு அதன் விபரங்களை வருவாய் துறைக்கு அனுப்ப வேண்டும். பின்னர் வருவாய் துறை புதிய உரிமையாளரின் பெயரை பதிந்து அவர் பெயருக்கு அடுத்த நிலவரி அல்லது நிலவரி ரசீதினை தரும். அஹ¥ஜா இதனை கண்டுகொள்ளாமல் பழைய பெயரிலேயே ரசீதுகள் பெற்று வந்தது.

தொழிற்பேட்டை அமைப்பதற்காக கர்நாடக அரசு அஹ¥ஜாவின் நிலங்களையும் மற்றும் அருகிலுள்ள பல நிலங்களையும் 1997ம் ஆண்டு கையகப்படுத்த எண்ணி, அரசிதழில் (Government Gazettee) அறிவிப்பு கொடுத்தது. அதனை அஹ¥ஜா கவனிக்காமல் போனதில் வியப்பில்லை. பின்னர் அரசு, வருவாய் துறை வணங்களை சோதித்து பழைய உரிமையாளர் பெயருக்கு அறிவிப்பு அனுப்பியது. அதனை பெற்றுக் கொள்ள அவரும் அங்கில்லை. பின்னர் உரிமையாளர் வராதவராக கருதப்பட்டு நில கையகப்படுத்தல் அதிகாரி தானே நஷ்ட ஈடு தீர்மானித்து நிலத்தை கையகப்படுத்தி விட்டார்.

வெகுதாமதமாக கையகப்படுத்தலை தெரியவந்த அஹ¥ஜா இண்டஸ்டிரீஸ் உரிமையாளாரன தனக்கு அறிவிப்பு தராமல் நிலம் கையகப்படுத்துதல் தவறு என வழக்கு தொடர்ந்தது. அரசோ, ‘பத்திரப்படி அவர் உரிமையாளர் என்றாலும் தாங்கள் வருவாய்துறை ஆவணங்களில் யார் பெயர் காணப்படுகிறதோ அவருக்கே அறிவிப்பு அனுப்புவோம், எனவே அறிவிப்பில் தவறில்லை’ என வாதிட்டது. அஹ¥ஜா இண்டஸ்ட்ரீஸ், ‘வருவாய்துறை ஆவணங்கள் வெறுமே வரிவசூலிக்கத்தானேயொழிய உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க அல்ல. எனவே அரசு பதிவாளர் அலுவலகங்களில் நில விபரங்களை தேடியிருந்தால் தற்போதைய உரிமையாளரின் பெயர் கிடைத்திருக்கும்’ என வாதிட்டது. கடைசியில் பாவம், உச்ச நீதிமன்ற வருவாய்துறை ஆவணங்களை மட்டுமே பார்வையிட்டு கொடுக்கப்பட்ட அறிவிப்பு சரிதான். பத்திர அலுவலகங்கெளுக்கெல்லாம் நில ஆர்ஜித அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்த வேண்டியதில்லை என்று தீர்ப்புக் கூற அஹ¤ஷா இண்டஸ்டிரீஸின் நெற்றியில் பட்டை நாமம்!

எனது சொந்த கட்சிக்காரரே இதே போன்றதொரு வழக்கில் பாதிக்கப்பட்ட அனுபவத்தை வைத்து எனக்கு இந்தவகையான சட்டக் கருத்து உடன்பாடானது அல்ல. எது எப்படியோ, இனியாவது நிலம், கட்டிடம் கிரயம் முடிக்கையில் பத்திரம் பதிந்த கையோடு...சொத்துவரி, கிஸ்தி, நிலவரி, பட்டா அடுத்து என்ன என்னவோ அனைத்தையும் உங்கள் பெயருக்கு மாற்றி விடுங்கள். பின்னர் அனாவசிய பிரசனை இல்லையே!

மும்பை
20.12.2003

(சொத்து சம்பந்தமான பத்திரங்களை பதிவதற்கு இன்று முதல் சம்பந்தப்பட்டவரின் புகைப்படமும் தேவை. எனவே புகைப்படத்தினை எடுத்துச் செல்ல மறவாதீர்கள். வேறு சிலவும் முக்கியம் என்று சுட்டிக்காட்ட இக்கட்டுரை)

No comments: