5.7.06

அந்தரங்கம் புனிதமானது - III

பெண்பிள்ளைகள் வயதுக்கு வருவதைக் கூட 'மைக் செட்' வைத்து ஊருக்கே தெரிவிக்கும், வழக்கமுள்ள இந்தியாவில் 'அந்தரங்கத்தின் புனிதம்' என்பது எவ்வளவு தூரம் போற்றப்பட முடியும்? கூட்டுக் குடும்பம், அண்டை அயலாரோடு அதீதமாக பாராட்டும் உறவு என்று நமது சமுதாயத்தில் அந்தரங்கம் என்பது ஒரு சிறிய அறையின் சுவர்களுக்குள்ளேயே அடங்கிப் போகும் பண்பென்றாலும், நமது சட்டங்கள், வளர்ந்த நாடுகளின் சட்டங்கள் அம்மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளுக்கு சற்றும் குறைவில்லாத உரிமைகளை வழங்குகின்றன.

ஒரு குடிமகனின் மீது சாதாரண தருணங்களில் கட்டாய மருத்துவ சோதனை என்பது இங்கும் இயலாத கார்¢யம். ஆனால், குற்றம் செய்ததாக கருதப்படும் நபர் மீது கட்டாய மருத்துவ பரிசோதனை நீதிமன்ற உத்தரவின்றியே நடத்தப்படலாம். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட நபரை, அவர் செய்துள்ள குற்றத்தை நிரூபிக்க தேவை எனும் பட்சத்தில் தகுந்த மருத்துவரை கொண்டு பரிசோதனை செய்யலாம். ஆனால் சோதனை நல்லெண்ணம் கொண்டு குற்றத்தினை நிரூபிக்க எந்த அளவு தேவையோ அந்த அளவு நடத்தப்பட வேண்டும். பொதுவாக இவ்வகை சோதனைகள் மோட்டார் வாகன விபத்துகளிலும் வன்புணர்வு வழக்குகளிலும் நடத்தப்படுகின்றன.

மேலும் ஒரு சந்தர்ப்பத்திலும் கட்டாய மருத்துவ பரிசோதனை கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்படலாம். கவனக்குறைவாகவோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ ஒரு நோயைப் பரப்பும் வண்ணம் ஒருவர் ஒரு காரியம் செய்கையில் அவை தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள் என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது. ஆக, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் ஒருவரை கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.

அவ்வாறென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அமெரிக்காவில் இருப்பது போல ஒருவரை தனக்குத் தானே சாட்சியாக பயன்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்பு இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஏற்கனவே கூறியபடி அமெரிக்க 'பில் ஆஃப் ரைட்ஸை' சுவீகரித்துதான் நமது அடிப்படை உரிமைகள் எழுதப்பட்டன. அவ்வாறென்றால், நான் மேலே கூறிய, கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் காவலர்களின் உரிமை இந்த அடிப்படை உரிமையை பாதிக்கிறதா என்றால், அவ்வாறுதான் தோன்றுகிறது. ஆனால் ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றங்கள் பாதிக்கவில்லை என்று தீர்ப்பு கூறியுள்ளதால் அதைப் பின்பற்றி இந்திய நீதிமன்றங்களும் தீர்ப்பளிக்க தயங்காது என்பதால், வழக்கு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என அறிகிறேன். ஆக இந்தியாவில் கட்டாய மருத்துவ பரிசோதனை என்பது கைது செய்யப்பட்டவரின் மீது செய்ய சாத்தியம். ஆனால் அந்தச் சோதனை நடந்த குற்றத்திற்கான சாட்சிகளை சேகரிக்கும் வண்ணம் மட்டுமே இருக்க முடியும்.

இதே கருத்தை நமது உச்ச நீதிமன்றம் ஒரு சமீபத்திய தீர்ப்பில் தனது கருத்தாக (obiter) கூறியுள்ளது. சாரதா எதிர் தர்மபால் (JT 2003 (3) SC 399) என்ற அந்த வழக்கானது ஒரு விவாகரத்து சம்பந்தமான வழக்கு. திருமணமாகி நான்கு வருடங்களில் கணவர் தனது மனைவி புத்தி சுவாதீனமில்லாதவர் என்று கூறி விவாகரத்து கோரினார். அவ்வாறு அவர் கூறியதால் மனைவி புத்தி சுவாதீனமில்லாதவர் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருடையது. எனவே அதற்காக தனது மனைவியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று ஒரு மனு தாக்கல் செய்தால். நீதிமன்றத்துக்கு அவ்வாறு தன்னைப் பணிக்க அதிகாரமில்லை என்று மனைவி வாதிட்டார். நீதிமன்றம் அதை ஏற்காமல் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும்படி உத்தரவிட்டது. மனைவி உயர் நீதிமன்றத்தை அணுக அங்கும் அதே முடிவு. முடிவில் உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது.

உச்ச நீதிமன்றத்தில் மனைவியின் சார்பில், இவ்வாறு அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுமாறு உத்தரவிடுவது அவரது அடிப்படை உரிமையான 'வாழ்வதற்கான உரிமை'யை பாதிப்பதாக வாதிடப்பட்டது. நமது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய பல தீர்ப்புகள், இரு வேறுபட்ட நிலையினை பிரதிபலிப்பதாக இருந்தது. அந்த தீர்ப்புகளையும், வேறு பல நாடுகளின் தீர்ப்புகளையும் அலசிய உச்ச நீதிமன்றம் இறுதியில் அளித்த தீர்ப்பு....'இவ்வாறு உத்தரவிட சிவில் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது, அவ்வாறு உத்தரவிடுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறியதாகாது' ஆனால் 'இத்தகைய உத்தரவிடுவதற்கு முன்னர் அதற்கு தகுந்த தேவையிருக்கிறதா' என்பதை ஆராய வேண்டும் என்று கூறும் உச்ச நீதிமன்றம் கடைசியில் முடிவாக கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது, 'இந்த உத்தரவுக்கு ஒருவர் கீழ்ப்படியாவிட்டால்...அவருக்கு எதிர்மறையான யூகத்தினை (adverse inference) நீதிமன்றங்கள் வடித்துக் கொள்ளலாம்.

தெளிவாக கூறுவதென்றால், மனைவி இந்த உத்தரவிற்கு கீழ்ப்படியாவிட்டால் அவரை கட்டாயப்படுத்த முடியாது. நீதிமன்ற அவமதிப்பு என்றும் கூற இயலாது. மாறாக, அவரை ஒரு மனநோயாளி என்று நீதிமன்றம் யூகிக்கும். அவ்வாறாக நீதிமன்றம் யூகிக்கையில், 'அவர் ஒரு மனநோயாளி இல்லை' என்று நிரூபிக்கும் பொறுப்பு மனைவியைச் சேரும்...சுருக்கமாக, மனைவி அந்த வழக்கில் தோற்க நேரிடலாம். ஆனால், தனது அந்தரங்கத்தை மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும். அந்தரங்கம் என்பது இங்கும் புனிதமானதுதான்.

நிறைவடைகிறது

குறிப்பு: சமீப காலங்களில் ‘நார்கோ அனாலிஸிஸ்’ என்ற சோதனை பற்றி செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அதாவது ஒருவரை வசிய மருந்து (narcotic substance) கொடுத்து அவரது மன உறுதியை குலைத்து காவலர்கள் விபரங்களைப் பெறும் முறை. இவ்வாறான சோதனைக்கு ஒருவரை உட்படுத்த நீதிமன்றத்தின் அனுமதி தேவை. தெல்கியை இவ்வாறு நீதிமன்ற அனுமதி பெற்று சோதனைக்குட்படுத்தியதை பலர் அறிவீர்கள். ஆனால், இவ்வாறு வசிய மருந்தினை தனது உடம்பினுள் செலுத்துவது தனது மத உரிமையினை பாதிப்பதாக ஒருவர் வாதிட்டால் என்ன ஆகும்? காத்திருக்கிறேன்...அவ்வாறான வாதம் வைக்கப்படும் வேளைக்காக!

1 comment:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வழக்கம்போல் விரிவாகவும் தெளிவாகவும் இருக்கிறது உங்கள் பதிவு. பலவற்றைத் தெரிந்து தெளிந்துகொள்ள முடிகிறது.