31.10.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 3


நீதிபதிகள், தங்கள் முன் வைக்கப்படும் வழக்குரைஞர்களின் வாதங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே வழக்குகளை, முக்கியமாக பொது நலன் சார்ந்த வழக்குகளை தீர்ப்பது இல்லை என்பது, ஏதாவதொரு பிரச்னையில் பல்வேறு காலகட்டங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகளை உன்னிப்பாக கவனித்தால் புரியும். உதாரணமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்னையில் 1972, 1996, 2002 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளை ஆராய்ந்தால் எப்படி கால ஓட்டத்திற்கு ஏற்ப நீதிபதிகளும் தங்களது கருத்துகளை வடிவமைத்துக் கொள்கின்றனர் என்பதை உணரலாம். (அர்ச்சகர் பிரச்னையின் பயணம் என்ற தலைப்பில் இந்த மூன்று தீர்ப்புகளை பற்றி எழுதியுள்ளேன்) கவனிக்க வேண்டியது இந்த மூன்று தீர்ப்புகளுக்கும் அடிப்படையான அரசியலமைப்பு சட்டபிரிவுகளில் ஏதும் மாற்றமில்லை. மாறியது நீதிபதிகளின் மனப்போக்கு, அதாவது பொது மக்களின் மனப்போக்கு!

எனவே, இட ஒதுக்கீடு பிரச்னையிலும் நீதிபதிகள் நீதிமன்றத்தில் வைக்கப்படும் வாதங்களையும் தாண்டி தாங்களறியாமலேயே, பொதுக்கருத்துகளாலும் தங்களை வசப்படுத்திக் கொள்வது எதிர்பார்த்ததுதான். நீதிபதி திரு.ரத்னவேல் பாண்டியன் அவர்கள் மண்டல் கமிஷன் வழக்கு என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற வழக்கில் (Indra Sawhney Vs Union of India AIR 1993 SC 477) ‘இட ஒதுக்கீடு 100% அளவிற்கு இருக்க இயலாது எனினும் அதிகபட்சம் 50%தான் என்ற கட்டுப்பாடும் விதிக்க இயலாது என்றும் ‘க்ரீமி லேயர்’ என்ற பெயரில் நீதிமன்றம் சமூக கொள்கை முடிவில் தலையிடுதல் கூடாது என்றும்’ தனியே தீர்ப்பு எழுதியதற்கு அவர், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகிய தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணமாயிருக்குமா என்று ஒரு கேள்வியினை எழுப்பினால், இல்லை என்று ஆணித்தரமாக மறுப்பது கடினமான காரியம்.

அதே வழக்கில் இட ஒதுக்கீட்டில் அதிகபட்சம் 50%தான் என்று உச்ச நீதிமன்றம் வரையறுத்ததை அதற்கான வாத பிரதிவாதங்களுக்குட்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது என்று கூற முடியுமென்றாலும், கிரீமி லேயரைப் பற்றி அவ்வாறு கூற முடியாதென்பது எனது எண்ணம். எனெனில் அரசியலமைப்புச் சட்டத்திலுமின்றி, அதனை வடிவமைத்தவர்களின் விவாதத்திலும் அப்படி ஒரு பதமே இடம் பெறவில்லை. அப்படியிருப்பினும் அந்த வழக்கில் தேவையற்ற ஒரு கேள்வியினை உச்ச நீதிமன்றம் எழுப்பி தீர்வு காண முயன்றது, கிரீமி லேயர் குறித்து பொதுவில் விவாதிக்கப்பட்டு வந்ததன் தாக்கம்தான் அன்றி வேறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

மண்டல் கமிஷன் வழக்கானது விபிசிங் தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் 27% பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று 13.08.90 தேதியிட்ட குறிப்பாணையினை (Office Memorandum) எதிர்த்து தொடரப்பட்ட வழக்காகும். நரசிம்ஹராவ் தலைமையிலான அரசு 25.09.91 தேதியிட்ட பிறிதொரு குறிப்பாணை மூலம் இரு மாறுதல்களை விபி சிங் அரசு ஆணையில் கொண்ர்ந்தது. முதலாவது திருத்தம், ‘27% ஒதுக்கீட்டில் பிற்ப்படுத்தப்பட்டவர்களிலும் ‘poorer section’களுக்கு முன்னுரிமை (preference) அளிக்கப்படும். தகுந்த நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலியிடங்கள் மற்ற பிற்ப்படுத்தப்பட்டவர்களால் நிரப்பப்படும்’ என்பது. இரண்டாவது, ‘மற்ற ஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்பதாகும். வழக்கானது இக்குறிப்பாணைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடானது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பாவிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை உரிமையினை பாதிக்கிறது எனற வாதத்தினை முன் வைத்து. ஆக, நீதிமன்றத்தின் முன் தாங்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டவர்கள் எந்த ஒரு இட ஒதுக்கீட்டில் இடமே பெறாதவர்கள். அவர்களது வாதம் இட ஒதுக்கீடு யார் யாருக்கு என்பதை விட இட ஒதுக்கீடே தவறு என்பதுதான்.

வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று கூறி நரசிம்ஹராவ் அரசு கொணர்ந்த 10% இடஒதுக்கிட்டீனை செல்லாது என்று கூறியது. அடுத்த மாறுதலான பிற்ப்படுத்தப்பட்டவர்களிடையே poorer section என்பதை பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஏழைகள் என்று அர்த்தம் கொள்ளமுடியாது என்று கூறி சமூக ரீதியில் மேலும் பின் தங்கிய வகுப்பினர் என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும் என்றும் கூறியது. அதாவது பிற்ப்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர் என்று பிரிக்கிறோமே, அதனை. மேலும் முன்னுரிமை (preference) என்ற பதத்தினையும் அப்படியே அர்த்தம் கொள்ள முடியாது என்று கூறியது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் அனைத்து ஒதுக்கீடும் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு போய் பிற பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏதும் கிடைக்காது. எனவே இரு வகுப்பினருக்கும் எந்த விகிதத்தில் பகிர்ந்தளிப்பது என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்த்தது. நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த திருத்தத்தின் அர்த்தம் படிப்பவர்களுக்கு தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தாலும் ‘poorer section’ மற்றும் ‘preference’ ஆகிய வார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் அவ்வாறாக புதிய அர்த்தத்தினை அளிக்கவில்லையெனில் அந்த திருத்தத்தினையும் செல்லாது என்று தள்ளுபடி செய்ய வேண்டியிருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை.

***
to be continued...

3 comments:

ஒன்றுமில்லை said...

பிரபு,

இது ACLU தலைவருக்கும், அமேரிக்க சுப்ரிம் கோர்டில் இருக்கும் நிதிபதி ஸ்கலியா அவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல்.

உங்களுக்கு நேரம் கிடைக்கையில் பாருங்கள்.

பல்வேறு சுப்ரீம் கோர்ட் தீர்புகள் பற்றி நீதிபதி அவர்கள் விவரிப்பார்.

rtsp://video.c-span.org/15days/e101506_civilrights.rm?mode=compact

Sivabalan said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்..

தொடருங்கள்...

டண்டணக்கா said...

Interesting article.
/*
சொல்ல மறந்து விட்டேன். BHEL வழக்கில் கடந்த வெள்ளிகிழமை அதன் தேர்வு முறையினை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறப்பட்டது)
*/
Thanks for above update. Good job by Madurai high court. Could you please write in detail and your observation on this verdict. Waiting for you article on this...

Thanks,
Dan