16.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 6

மூன்றாம் நபர், யார்?

அரசியல் மாநாடுகளுக்கு லாரிகளில் ஆட்களை கொண்டு வந்து குமிக்கும் வழக்கம் தற்பொழுது முன்பு இருந்த அளவுக்கு இல்லை என்றாலும், சரக்கு வாகனங்களில் சரக்குகள் ஏற்றப்படும் அளவிற்கு மனிதர்களையும் ஏற்றிச் செல்லும் வழக்கம் இங்கு சர்வ சாதாரணம்.

சில நாட்களுக்கு முன்னர் கூட சரக்கு ஏற்றிச் செல்லும் மினிடோர் வண்டியின் பின்புறத்தில் சுமார் பதினைந்து சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் காட்சியை நாளிதழில் பார்த்தேன்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கூட இவ்வாறு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதை எப்படித் தடுப்பது என்று ஒரு பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கில் வாதாடிய பலரும் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்தாலும், அடிப்படைக் காரணம் இங்கு நிலவும் ஏழ்மைதான் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

ஆனால், சட்டத்துக்கு இது புரிய வேண்டுமே!

புரிந்திருந்தால் மூன்றாவது நபர் என்று கூறப்படும் நபர்களில் வாகன உரிமையாளரைத் தவிர அனைவரும் அடக்கம் என்று தெளிவாக கூறியிருக்கலாம். சரக்கு வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளை மனிதர்களாக சட்டமும் மதிக்கவில்லை. எனவே, அவர்களைப் பொறுத்து காப்பீடு இல்லை என்பதும் ஒரு அதிர்ச்சி தரும் உண்மை.

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை உச்ச நீதிமன்றம் மூன்றாம் நபர் காப்பீடு என்பது வாகன உரிமையாளரைத் தவிர மற்ற அனைவரையும் குறிக்கும் என்றுதான் கூறி வந்தது. பின்னர் மீண்டும் சட்டத்தினை தெளிவாக பரிசீலித்த உச்ச நீதிமன்றம் ‘சரக்கு வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மூன்றாவது நபர் இல்லை’ கூறியதால் தற்பொழுது சரக்கு வாகனத்தில் பயணிக்கும் மனிதர்களுக்கு எவ்வித காப்பீடும் இல்லை. ஒரே விதிவிலக்கு, சரக்குடன் பயணம் செய்யும் உரிமையாளர் அல்லது அவரது சார்பாக பயணிக்கும் நபர்.

தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் நபருக்காவது கட்டாயம் இல்லையெனினும் காப்பீடு செய்யும் வாய்ப்புண்டு. ஆனால், சரக்கு வாகனத்தில் பயணம் செய்பவருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. வாகனத்தின் உரிமையாளர் வசதியானவராக இருந்தால்தான் இழப்பீடு!

எனவே இக்கட்டுரையின் முன்னுரையில் கூறப்பட்ட மூன்றாவது சம்பவத்தில் ஏதும் விபத்து நடந்தால், பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு கொடுத்தே கடும் உழைப்பால் முன்னேறிய நபர் போண்டியாக வேண்டியதுதான்.

இந்த ஆபத்தினை தவிர்ப்பது என்ற ஆலோசனை என்னிடம் இல்லை. ஏனெனில், அதற்கு இந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு தொண்டர்கள் அனைவரையும் ஆம்னி பஸ்ஸில் கொண்டு வரும் வசதி வேண்டும்!

குறைந்த பட்சம், பள்ளி செல்லும் ஏழை மாணவிகள் டிராக்டரில் தொற்றிக் கொள்ளாமல் இருக்க அவர்களுக்கு ஒரு மிதி வண்டியாவது வேண்டும்!!

to be continued...

1 comment:

Sivabalan said...

சார்

இந்த தொடர் மூலம் பல தகவல்களை தெரிந்துகொண்டன்.

மிக்க நன்றி.

தொடரட்டும் இந்த மேலான பணி!