24.5.07

ஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)

சட்டம், நீதிமன்றங்களைப் பற்றி மக்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் வக்கீல் நோட்டீஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்படங்களில் கூட வக்கீல் நோட்டீஸைப் பெறுபவர், ஏதோ எமனது பாசக்கயிறு தன் மீது வீசப்பட்டது போல அதிர்ந்து புலம்புவதைப் பார்த்திருக்கலாம்.

ஆனால் இந்த நோட்டீஸ் எல்லாம் 'சும்மா குஸ்திக்கு முன்னர் அப்படியே வீடு கட்டுவதைப்' போலத்தான். பெரிய விளைவுகள் ஏதும் இல்லை. என்றாலும், வழக்குரைஞர் ஆவதற்கு முன்னரே நானும் எனது நண்பனும் அனுப்பிய ஒரு நோட்டீஸ் எங்கள் கல்லூரியில் கிளப்பிய பீதி!

***

கல்லூரி ஆண்டு மலரில் அந்தக் கதையைப் படித்தவுடனேயே எனக்கு பொறி தட்டியது, 'இதை எங்கோ படித்திருக்கிறோமே' என. பொதுவாக கல்லூரி மலர்களில் புகைப்படங்களை மட்டும் பார்த்து விட்டு தூர எறிவதுதான் வழக்கம் என்றாலும், கதையைப் படிக்க வைத்தது அதை எழுதியவர்.

எங்களூர் மாணவி!

தனது நெருங்கிய தோழிகள் இருவரைத் தவிர யாருடனும் பேசுவதில்லை. கூட்டாக கொண்டாடும் எதிலும் பங்கெடுப்பதுமில்லை. அந்த நான்கு வருடங்களில் என்னிடம் ஒரு தடவை கூட பேசியதில்லை. இத்தனைக்கு ஐந்தாவது வகுப்பு வரை நானும் அவர்களும் கிளாஸ் மேட்!

உடனே கதைகளில் ஓரளவுக்கு பரிச்சயமுள்ள என நண்பரிடம் கூறினேன். அவரும் 'மாட்னாடா' என்றார். என் அண்ணனுக்கு கல்லூரியில் தமிழில் சிறப்பு பாடமாக சக்தி-சிவம் என்பவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதியில்தான் படித்த ஞாபகம்.

விடக்கூடாது என்று ஒரு திட்டம் தீட்டினோம். அதற்காக அந்த கதைத் தொகுதியைத் தேடி நானும் எனது நண்பரும் மதுரையில் அலையாத இடம் இல்லை. கிடைக்கவில்லை.

சரி, இனி நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நானே பேனாவும் கையுமாக உட்கார்ந்து விட்டேன். மதுரை பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணிபுரியும் தனது கட்சிக்காரராரின் கதையை திருடி ஆண்டு மலரில் அந்தப் பெண் எழுதியுள்ளதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக 20,000 ரூபாய்(ஞாபகமில்லை) தர வேண்டுமெனவும் ஒரு நோட்டீஸ் எழுதினோம்.

யார் பெயரில் அனுப்புவது?

தான் பயிற்சி எடுக்கும் வழக்குரைஞரின் லெட்டர் பேடை நண்பர் கொண்டு வந்து...பதட்டமேயில்லாமல் அவரது கையெழுத்தையும் இட்டாயிற்று. நாங்கள் அதை பதிவுத் தபாலில் கல்லூரி விலாசத்துக்கு அனுப்பியது எங்களிருவரைத் தவிர யாருக்கும் தெரியாது.

கல்லூரி தினமும் இரண்டு மணி நேரம்தான். ஆனாலும் அனைவரும் உட்கார்ந்து அரட்டை கச்சேரி நடத்தினாலும், இந்தப் பெண் தங்குவதில்லை. எனவே முதல் நாள் தபால்காரர் வருகையில் அவர்கள் இல்லை. இரண்டாம் நாள், நாங்கள் தள்ளியிருந்து கவனிக்க அந்தப் பெண் தனது தோழிகளுடன் லாபியிலேயே கடிதம் எதிர்பார்த்து உலாத்திக் கொண்டிருந்தார்.

ஆச்சு, தபால்காரர் வந்ததும் கையெழுத்திட்டு அதை பிரித்து மாற்றி மாற்றி மூன்று பெண்களும் படிக்கிறார்கள். அப்படியே சுற்றுமுற்றும் அவர்கள் பார்க்க, 'மாட்டிக் கொண்டோம்' என நாங்கள் இருவரும் அறைக்குள் ஒளிந்து கொண்டோம். நான் எழுதிய நோட்டீஸில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சிறிது நேரம் கழித்து மெல்ல வெளியே சென்றால், ஒரு பெரிய கூட்டமே அங்கிருந்தது.
நாங்களும் நல்லபிள்ளையாக அருகே சென்றால், அங்கே பெரிய விவாதம் நடைபெற்று
கொண்டிருந்தது.....'யார் இப்படி எழுதி அனுப்பியது என்றில்லை. மாறாக, நோட்டீஸை எப்படி எதிர்கொள்வது என’

எங்களுக்கு ரொம்ப குஷியாகிப் போனது, 'அட ஒரு கூட்டமே ஏமாறுவதற்கு தயாராக
இருக்கிறதென'

"இதப் பாத்து எல்லாம் பயப்பட வேண்டாம். ஐடெண்டிட்டி ஆப் தாட்னு (identitiy of thought) ஒன்று இருக்கு அதன்படி இருவருக்கு ஒரே நேரத்தில் ஒரே எண்ணங்கள் தோன்றலாம்" என்று நான் அடித்து விட்டேன். அப்படி ஒன்றும் இல்லை என்று மறுக்கும் நிலையில் யாரும் இல்லை. அந்தப் பெண் ஏறக்குறைய அழும் நிலையிலிருந்தார்.

"நானே ஸ்காலர்ஷிப்பில் படிக்கிறேன். என்னால் எப்படி இவ்வளவு பணம் கட்ட முடியும்" என்று புலம்பியபடி இருந்தவரை அங்கு குழுமிய ஆண்களும், பெண்களும் தேற்ற, நிலைமை எங்களை மீறிச் சென்று விடாமல் காப்பாற்ற வேண்டி நான், "சரி கொடுங்க, நாங்கள் எங்கள் வக்கீலிடம் சென்று பதில் நோட்டீஸ் தயார் செய்கிறோம்.

அப்புறம் அவங்கெல்லாம் பெரிய புரொபசருங்க....சும்மாத்தான் நோட்டீஸ் அனுப்பியிருப்பாங்க. போய் ஒரு மன்னிப்பு கேட்டுட்டா போதும் என்றேன்"

இதைக் கேட்டவர் "நான் மீனாட்சி அம்மன் கோவிலில் வச்சி சத்தியம் பண்றேன், நான்தான் எழுதினேன்னு. ஐயோ, எங்க வீட்டில எல்லாம் நான் எப்படி பெருமையா சொன்னேன்" என்று அழுதே விட்டார். பெண்கள் கூட்டத்திலிருந்து சில மோசமான வசவுகளும் பேராசிரியர் சிவத்துக்கு கிடைத்தது.

அடுத்த நாள், எனது நோட்டீஸுக்கு நானே ஒரு பதில் நோட்டீஸ் தயார் செய்ய வேண்டியதாயிற்று. அதை எடுத்துக் கொண்டு கல்லூரி சென்றால், அந்தப் பெண் மதுரையில் பெரிய வக்கீல் ஒருவரின் மகனாக பிறந்ததால், தானும் அதற்குள்ளாகவே பெரிய வக்கீலாகி விட்டது போல படம் காட்டும் ஒரு மாணவருடன் பேசிக் கொண்டிருந்தார். 'ஆஹா, இவன் வேற வந்து மூக்கை நுழைச்சுட்டானா...இனி விளங்குனாப்லதான்" என்று நினைத்தேன்.

அந்த மாணவரால் காரியம் கெட்டுவிடுவது உறுதி என்று நினைத்தோம். பின்னர் என்னிடம் வந்த அந்த மாணவி, எனது பதில் நோட்டீஸை வாங்கியதும், வேறு எதுவும் பேசாமல் பெண்கள் அறைக்கு சென்று விட்டார். கண்கள் இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை என்பதை உணர்த்தியது.

அறைக்குள் சென்றவர் ஆளையே காணோம் என்றதும் பயம் வந்தது, 'மாட்டிக் கொண்டோம்' என்று. அறையின் கதவை திறந்தால் சுற்றிலும் மற்றவர்கள் அமர்ந்திருக்க நடுவே அவர் அழுது கொண்டிருந்தார்.

என்னவென்று கேட்டால் வக்கீல் மகன், 'நோட்டீஸ் எதுவும் வேண்டாம். தானே நேரடியாக சென்று, பேராசிரியரிடம் பேசுவதாக' கூறியிருக்கிறார். அதுதான் 'அவர் சொல்படி கேட்பதா இல்லை எங்கள் சொல்படி கேட்பதா என்ற குழப்பமாம்'.

சின்ன மீனுக்கு வலை போட்டால் இவ்வளவு பெரிய மீன் வந்து மாட்டியிருக்கிறதே என்ற திருப்தியில் போதும் இத்துடன் முடித்துக் கொள்வோமென அவர் கையிலிருந்த நோட்டீஸை வாங்கி கிழித்துப் போட்டேன்.

நாடகம் இத்துடன் முடிந்தது என்று நினைத்தால், என் நண்பன் என்னுடன் பெரிதாக சண்டை பிடித்தான், 'எப்படி நான் கிழிக்கப் போயிற்றென்று' பதில் நோட்டீஸ் தயாரித்த வக்கீல் ரொம்ப பெரிய வக்கீலாம் (!). இலவசமாக அவர் தயாரித்த நோட்டீஸை நான் எப்படி கிழிக்கப் போயிற்றென்று.

முதலில் குழம்பிய நான்...நண்பனை புரிந்து கொண்டு பதிலுக்கு கத்தினேன். கடைசியில் 'அவருக்காக நாஙக்ள் சண்டையிட வேண்டாம்' என்று அந்தப் பெண் மேலும் அழ, எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. 'கவலைப்படாதீர்கள். இந்த முதல் நோட்டீஸே நாங்கள்தான் அனுப்பினோம்' என்று குட்டை உடைக்க, முதலில் ஒரு கணம் என்ன செய்வது என்பது தெரியாமல்....அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே ஐந்து நிமிடமாயிற்று.....வகுப்பு பெண்களெல்லாம் எங்களை 'பிலு பிலு' வென பிடித்துக் கொள்ள, அன்று அனைவரையும் சமாதானப் படுத்த போதும் போதும் என்று ஆகியது....

ஆனால் இன்றும் என் சந்தேகம் தீரவில்லை. அந்தக் கதையை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன். ஆனால், அந்தப் பெண் அந்த இரு நாட்களில் பலமுறை நாங்கள் கேட்காமலேயே சத்தியம் செய்தார்.

ஏன் அவர் ஒரு கதைக்காக பொய் சொல்ல வேண்டும்?

நன்றி: வலைப்பூ 01.04.07

(இங்கும் பலர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்! ‘மெளன ராகம்’ என்று ஒரு படம் எடுத்து இயக்குஞர் மணிரத்னம் வெளிச்சத்துக்கு வந்தார். இன்று வரை அந்த படத்தினை நான் பார்த்ததில்லை. ஏனெனில், படத்திற்கான விமர்சனத்தைப் படித்ததும், அனைத்து விமர்சனங்களிலும் வெகுவாக புகழப்பட்ட அதன் உச்சகட்ட காட்சி (climax) ஜெயகாந்தன் எழுதிய ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ என்ற குறுநாவலைப் போல இருந்ததால்...

எனது தாயாரும் இதனை என்னிடம் கூறினார்கள். ஒரு முறை இணையத்தில் குறிப்பிட்ட பொழுது, ஜெயகாந்தனின் alter ego வாக அறியப்படும் ஒருவர், தனக்கும் அவ்வாறு தோன்றியதாக தனியே மடல் எழுதியிருந்தார். எனது சந்தேகத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரம் என்று அவரது மடலினை கருதினேன்)

3 comments:

Anonymous said...

Test

ஓகை said...

படிப்ப்தற்கு விறுவிறுப்பாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாமோ என்று எனக்கு இப்போது தோன்றினாலும் இது நிகழ்ந்த போது உங்கள் மனநிலை அதற்கு இடம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.

நீங்கள் முதன் முறை படித்த அந்த கதையை எழுதியதே இந்த மாணவியாக இருப்பதற்கு ஒரு சாத்தியக்கூறு உண்டல்லவா?

புருனோ Bruno said...

ஹா ஹா ஹா