17.4.08

சாய் பாபாவும் இராமரின் மோதிரமும்!

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை பற்றிய அவரது நிறுவனம் தயாரித்த ஆவணபடம் ஒன்றினை பார்த்தேன். இறுதியில் பொது நிகழ்ச்சியில், தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே வைத்தார்.

ஆவணப்படத்தில் வர்ணனை வழங்கியவர், அது பின்னர் மறைந்துவிடும் என்று கூற தொலைக்காட்சித் திரை முழுவதுமாக மங்க மோதிரம் மறைந்து போனது!

இவ்வாறாக சாய்பாபா நகைகளை கொணர்வது பற்றிய விபரங்கள் அவர்களது வலைத்தளத்திலும் கண்ணுற்றேன்.

-oOo-

ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம் என்றால் அரிய பழம் பொருள் ஆயிற்றே. அரசுக்கு தெரிவிக்காமல் அதனை வைத்திருக்கலாமா என்ற இயல்பான சந்தேகம் எழுந்தது.

1958ம் வருடம் இயற்றப்பட்ட ‘The Ancient Monument and Archeological Sites and Remains Act’ என்ற புராதான சின்னங்களைப் பற்றிய சட்டத்தில் பழம்பொருட்கள் பற்றியும் கூறப்படுகிறது. ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரமென்றால், இந்த சட்டப்பிரிவில் பழம்பொருள் (antiquity) என்று விளக்கப்படும் பதத்திற்குள் வரும். ஆனால் இந்தச் சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசாங்கம் ஏதாவதொரு பழம்பொருளானது ஒரிடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படக்கூடாது எனில் அவ்வாறு அறிவிக்கலாம். அவ்வாறான உத்தரவு மீறப்பட்டாலே அது தவறாகும்.

எனவே சாய் பாபா ராமரின் மோதிரத்தினை வைத்திருப்பதில் ஏதும் தவறில்லை!

-oOo-

பின்னர் 1972ம் ஆண்டில், ‘The Antiquities and Art Treasures Act’ என்று பழம்பொருட்கள் மற்றும் கலைச்செல்வங்களுக்காக தனியே ஒரு சட்டமியற்றப்பட்டது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி பழம்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விற்றல் ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக பழம்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை மத்திய அரசிடம் தெரிவித்து அதனைப் பற்றிய விபரங்களை பதிய (register) வேண்டும்.

ஆனால் மத்திய அரசு எந்த எந்த வகையான பழம்பொருட்களை பதிய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அவற்றை பதிந்தால் போதுமானது.

ராமர் சீதைக்கு அணிவித்தது, தங்க நகை/ ஆபரணம். இதனை பதிவு செய்ய வேண்டுமா என்று பார்த்தால் மத்திய அரசு இதற்காக 1976ம் ஆண்டு GSR 280(E) என்ற அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள்’ பதிவு செய்யப்பட வேண்டிய பழம்பொருட்கள் பட்டியலில் வருகிறது.

ஆக, சாய்பாபா இந்தச் சட்டத்தின்படி தன்னிடம் உள்ள பழம்பொருளான நகை பற்றிய விபரத்தினை மத்திய அரசிடம் பதியாமல் விடுவது தவறுதான்.

ஆனால், 1980ம் வருடம் மத்திய அரசு S.0. 397(E) என்ற அறிக்கை மூலம் பதிவு செய்ய வேண்டிய பழம்பொருட்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே சாய் பாபா தான் எடுக்கும் நகைகளை பதிய வேண்டியதில்லை.

எனவே 1976ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு வரைதான் இந்தப் பிரச்சினை. பின்னர் இல்லை. சாய்பாபா நகைகளை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை!

-oOo-

இந்த வெட்டி ஆராய்ச்சிக்காக வலையினை மேய்கையில், இதை விட வெட்டி ஆராய்ச்சி செய்து ‘சாய்பாபா’ பக்தர்களுக்கு அளிக்கும் தங்க நகைகள் மூலம் தங்க கட்டுப்பாடு சட்டத்தினை மீறுகிறார் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்த விபரம் கிடைத்தது

-oOo-

ஞாநி பிரச்சினை விடாது போலிருக்கிறது. சுடுவது சுகம் என்ற வலைப்பதிவில் காப்பிரைட் பற்றிக் கவலைப்படாமல் ஞாநியின் கட்டுரையொன்றினை பதிந்திருக்கிறார்கள். அதில் ஞாநி இவ்வாறு ஆரம்பிக்கிறார்

தனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது

நானறிந்த வரையில் அவ்வாறு 1963ம் வருடம் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை!

இந்தியா - சீனா போர் சமயத்தில் நாடு முழுவதும் எழும்பிய தேசபக்தி அலையிலும், இம்மாதிரியான கொள்கைகளை கொண்டிருக்கும் கட்சிகள் தடை செய்யப்படலாம் என்ற மறைமுகமான மிரட்டல்களாலும்தான் திமுக பிரிவினை கோரிக்கையினை கைவிட்டது என்பது எனது அனுமானம்.

அவ்விதம் ஏதும் சட்டம் இயற்றப்பட்டு, யாரேனும் ‘பாபா’ உட்பட (சாய்பாபா இல்லை நம்ம பாபா) தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

-oOo-

இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி சட்டபூர்வமாக அலசும் ஒரு ஆங்கிலப்பதிவில் சுட்டியினை பத்ரி தந்துள்ளார். மணற்கேணியினைப் போல இல்லாமல் மேலும் ஆழமாக சட்டத்தினை ஆழமாக படிக்க விரும்புவர்களுக்கு உதவும்.
http://lawandotherthings.blogspot.com/

மதுரை
18.04.08

11 comments:

கோவி.கண்ணன் said...

//ஆக, சாய்பாபா இந்தச் சட்டத்தின்படி தன்னிடம் உள்ள பழம்பொருளான நகை பற்றிய விபரத்தினை மத்திய அரசிடம் பதியாமல் விடுவது தவறுதான்.//

ஐயா,

மனிதர்களின் சட்டம் மகான்களுக்கு பொருந்துமா ?

பகவானுக்கே சட்டமா ? இப்படியெல்லாம் சொல்லி தெய்வ குற்றத்துக்கு ஆளாகாதீர்கள், அந்த ஆண்டவனின் நீதிமன்றத்தில் வக்கில் வைக்க முடியாது.
:)

துளசி கோபால் said...

நீங்க மோதிரம் பற்றிச் சொல்றீங்க. ஆனா இங்கே ஒரு சாயி பக்தர் சொன்னது இன்னும் விசித்திரம்.

இவரே ராம அவதாரத்தில் 'தான்' எப்படியெல்லாம் இருந்தேன்னு பக்தர்களுக்கு ஒரு நாள் பிரசங்கத்தில் சொன்னாராம். ஆறடி உயரத்தில் ரொம்ப அழகா இருந்தாராம். (அப்ப இருந்தே மோதிரத்தைப் பத்திரப்படுத்தி இருந்தார் போல)

கேட்டுட்டு நான் வாயையே திறக்கலை:-)))))

Anonymous said...

பிரிவினை கோருவதை தடைசெய்ய சட்டம் கொண்டுவரப் போவதாக அரசு அறிவித்ததும் திமுக பிரிவினை கோரிக்கையை கைவிட்டது என்றே நினைக்கிறேன். ஞாநியின் கட்டுரை
பிரிவினையை ஆதரிக்கிறதா இல்லை
பிரிந்து போகும் உரிமையை ஆதரிக்கிறதா என்பது ஞாநிக்கே புதிராக இருக்கும்.ஏனென்றால்
அவர் அவ்வளவு தெளிவாக
எழுதியிருக்கிறார் :).தேசிய இனம்
என்பது புரிந்து கொள்ளப்படாமல்
பயன்படுத்தப்படும் பல நூற்றுக்கணக்கான சொற்களில்
ஒன்று.இந்தக் கட்டுரையிலும்
அதே பிரச்சினை.

வால்பையன் said...

இன்னுமா நீங்க இதெல்லாம் நம்புரிங்க

வால்பையன்

Boston Bala said...

இந்த மாதிரி தலைப்பு வைத்தால்தான் படிக்க ஆசை வருகிறது :)

பதிவுக்கு நன்றிகள் பல!

Unknown said...

//பழம்பொருட்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே சாய் பாபா தான் எடுக்கும் நகைகளை பதிய வேண்டியதில்லை. எனவே 1976ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு வரைதான் //
எப்படி இது? "அரசகுலத்தவர்" பலர் இதனால் பயன் பெற்றிருப்பார்களே? இன்றைக்கும் கோவில்கள் பலவற்றில் பழம்பெரும் நகைகள் உள்ளனவே? பட்டியலில் விடப்பட்டாலும், புதிய சட்ட‌த்தின் சொல்லமைப்பு புதுப் பட்டியலை மட்டுமே அமல்படுத்துமா?

"..other work of craftmanship".. என்று 1958சட்டத்தில் இருக்கிறது. அது நகையாகவும் இருக்கலாம் இல்லையா? நீங்கள் கொடுத்த சுட்டியில் அந்த மோதிரம் மனிதரால் செய்யப்பட்டது போல்தான் இருக்கிறது;-) அத்தோடு 1972சட்டமும (1958 சட்டத்தைப் போலவே) இலக்கிய/மத சம்பந்தப்பட்ட பொருளும் பழமையான பொருள் என்றும் சொல்கிறது... இந்த வரையறைகளின் கீழ் பட்டியலிடவில்லை என்று கேட்க முடியாதா?

பொறுமையாய் விளக்குவதற்கு நன்றி.

PRABHU RAJADURAI said...

இந்த வரையறைகளின் கீழ் பட்டியலிடவில்லை என்று கேட்க முடியாதா?

Rama's ring would come within the definition of antiquity in both the Act. However the question is whether there is any illegality.

Neither Act makes it illegal to possess an Antiquity.

In the 1972 Act, there is an obligation to register the notified Antiquities (Note: only notified antiquities). There was no possibility that Saibaba would register his antiquity.

The jewel though notified in 1976, was deleted in the amended list of the year 1980. Hence, Saibaba is not breaching any law, even if fails to register the jewel.

One cannot force the Government to include jewel in the list. It is the prerogative of the executive or the legislature.

Kasi Arumugam said...

அட உங்கள வெச்சுட்டு ஒரு உடான்சும் உட முடியாதுபோல இருக்கு. பாவம்ங்க அவங்க. விட்டுடுங்க.

Sundar Padmanaban said...

//தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த //

போன ஜென்மத்துல பாம்பா பொறந்திருப்பாரோ? இப்படிக் கல்லு கல்லா கக்கறாரே? அடுத்த தடவை புட்பால் சைஸுக்கு ஒரு கல்லை வாயிலருந்து எடுத்துக்காட்ட முடியுமான்னு கேக்கணும்!

அது சரி. எச்சி மோதிரத்தைக் கழுவினாங்களா யாராச்சும்?

பிஸி சர்க்கார்ட்ட சொன்னா வாயிலருந்து ஒரு ஆளையே வரவழைப்பாரே!

அட போங்கப்பா!

Sridhar V said...

இராமர்தான் அந்த மோதிரத்தை சீதைக்கு தந்து விட்டாரே.... தலைப்பை 'சாய் பாபாவும் சீதையின் மோதிரமும்'னு மாத்துங்கப்பு. :-))

BBC-ன் ஆவணப் படம் பார்த்தீர்களா? பெரியார் திராவிடர் கழகம் அதை தமிழ்படுத்தி இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்த ஆவணப் படத்தில் மிகப் பெரிய காமெடி முரளி மனோகர் ஜோஷியின் பேட்டிதான்.

இராமராவது சீதைக்கு மட்டும்தான் மோதிரம் கொடுத்தார். சாயிபாபா தப்பித்தார். இனி வரும் அவதாரங்கள் சாயிபாபா தன் 'துணை'க்கு கொடுத்த மோதிரத்தை வாயிலிருந்து எடுக்கவேண்டும் என்றால் பெரிதும் கஷ்டம்தான். மனிதர்(?!) அத்தனை மோதிரங்கள் (பரிசுகள்) அள்ளி கொடுத்திருக்கிறாரே.

Anonymous said...

In it something is. Thanks for the help in this question, I too consider, that the easier the better …