3.2.09

கொஞ்சம் இரக்கம் மட்டும் போதும்!

சில வருடங்களுக்கு முன்னர், சில பயங்கரவாதிகள் இந்திய விமானமொன்றினை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் சென்றனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட சுமார் நூறு பயணிகளின் உயிரினைக் காக்க, அவர்களின் உறவினர்கள் தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். “48 மணி நேரம்தான், பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறவில்லையெனில், அவர்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இந்திய அரசு கூறவில்லை.

சில வாரங்களுக்கு முன்னர், சில கொள்ளைக்காரர்கள் கப்பல் ஒன்றில் இந்திய மாலுமிகள் சிலரை பயணக்கைதிகளாக பிடித்தனர். “48 மணி நேரம்தான். அதற்குள் மாலுமிகள் வெளியேறவில்லையெனில் அவர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை” என்று நமது கடற்படை கூறவில்லை.

ஏன், சில மாதங்களுக்கு முன்னர் காசாவிலிருந்து ராக்கெட்டுகளை அனுப்பும் ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்று இஸ்ரயீல் காசாவின் மீது தாக்குதல் தொடுத்தது. ஹமாஸ் தீவிரவாதிகளோடு காசாவாசிகளும் பாதிக்கப்பட, தனது குடிமக்கள் இல்லையெனினும், “காசாவாசிகள் வெளியேறவில்லையெனில் அவர்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இஸ்ரயீல் கூறவில்லை.

ஆனால், இலங்கையில் மட்டும் ஏன் தனது ‘சொந்த குடிமக்களை’ப் பார்த்து, ராணுவ மந்திரி “அவர்களது உயிருக்கு உத்திரவாதமில்லை” என்று கூற முடிகிறது?


***

சொந்த குடிமக்கள் நிலையே, இந்தியர் பாடு இன்னும் மோசமாக இருப்பதில் வியப்பில்லைதான். உலகில் பிற எத்தனையோ நாடுகள் மிகச்சிறிய கடல்பறப்பினை தங்களிடையே கொண்டுள்ளன...ஆனால் வேறு எங்கு இந்த அளவிற்கு மீனவர்கள் மற்ற நாட்டு கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்?

அதுவும் ஒரு வல்லரசு நாட்டின் குடிமக்களான மீனவர்கள்!


***

Insensitivity - அது இலங்கை ராணுவ மந்திரியின் வார்த்தைகளில் மட்டும் இல்லை. லட்சக்கணக்கான குடிமக்களை பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து, அவர்களின் உயிரினை கேள்விக்குறியதாக்கியிருக்கும் சூழ்நிலையில் எந்த நாடு ‘கிரிக்கெட்’ விளையாடி கொண்டாடிக்கொண்டிருக்க முடியும்?


***

Insensitivity - அது சில இந்தியர்களின் நடவடிக்கைகளிலும் இல்லை. சென்னையின் ஒரு பகுதி, பத்திரிக்கையாளன் ஒருவனின் மரணத்தில் கொந்தளித்துக் கிடக்க மதுரை முழுவது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்ட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள்.

இரவு சாலை வழியே நடந்து சென்றவனின் காதில், கணீரென்ற குரலில் நாகூர் ஹனீபாவின் பாடல்
‘இலங்கையில் துயருரும்
தமிழனைக் காத்திட
...............................
சின்னத்திலே
ஓட்டுப் போடுங்க மொத்தத்திலே’


நான் எளிதில் கலங்குவதில்லை......
ஆனாலும் இந்த insensitive வரிகள்!

மதுரை
040209