29.4.11

சாய்பாபா (எனக்கு) நிகழ்த்திய கடைசி அதிசயம்!

நான் கனவில் கூட நினைத்ததில்லை, சாயிபாபா தனது கடைசி அதிசயத்தை எனக்காக நிகழ்த்துவார் என்று!

எனக்கு ஒரு வயதான கட்சிக்காரர் உண்டு. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவரது வழக்குகளை நடத்தித்தர வேண்டும் என்று, வேறு ஒரு வழக்குரைஞரால் என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார். ‘ஐயா, நான் மாவட்ட நீதிமன்றத்திற்கு முக்கியமான வழக்குகளை நடத்துவதற்கு மட்டுமே செல்கிறேன், எனவே நீங்கள் வேறு வக்கீல் வைத்துக் கொள்ளுங்கள்.’ என்றாலும் விடவில்லை என்பதால், ‘மற்ற வாய்தாக்களுக்கெல்லாம் என்னுடைய ஜூனியர்தான் வருவார், வழக்கு விசாரணையின் பொழுது மட்டுமே நான் வர இயலும்’ என்று கண்டிப்புடன் கூறி வழக்கினை எடுத்துக் கொண்டேன்.

ஆயினும் ஒவ்வொரு முறை வழக்கு வாய்தா போடப்படும் பொழுதும், அடுத்தமுறை நான் எப்படியும் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று மன்றாடுவார். அவரை ஒவ்வொரு முறையும் சமாளிப்பது கடினம் என்றாலும், கெஞ்சல் மிஞ்சினால் கண்டிப்பு என்று அவரை தவிர்த்து வந்தேன். இறுதியாக கடந்த வாரம் வந்த வாய்தாவுக்கு நான் வருவேன் என்று சொல்லி வைத்திருந்தேன்

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரிடமிருந்து தொலைபேசி! ‘நான் புட்டபர்த்திக்கு செல்கிறேன். பாபாவின் மறைவைக் கேட்ட பின்னர் இங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை.’ என்றார். ‘அப்பாடா’ என்றிருந்தது எனக்கு.

இரண்டு நாட்கள் கழித்து, அவர் மதுரையில் இல்லை என்பதால், தைரியமாக ஜூனியரை அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் அவரிடம் இருந்து தொலைபேசி, ‘சாயி சரணம். நல்ல தரிசனம் பார்த்தேன்...அப்புறம் நேற்று நீங்களே வாய்தாவுக்கு போனதாக கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் சார்!’

‘நாம் எப்போ கோர்ட்டுக்கு போனோம்...’ என்று ஒரு கணம் வியந்தாலும் அடுத்த கணமே, சமாளித்துக் கொண்டு ‘ஆமா, ஆமா’ என்று வேகமாக ஆமோதித்து வைத்தேன்.

உடனடியாக எனது ஜூனியரைக் கூப்பிட்டு, ‘நீதான் அவரிடம் நானே கோர்ட்டுக்கு போனதாக கூறினாயா?’ என்றதற்கு ‘இல்லையே சார், நான் அவரிடம் இது வரை பேசவேயில்லையே’ என்றார். ‘பின்ன யார் அப்படி சொல்லியிருப்பார்கள்?’

ஒருவேளை சாயிபாபாவாக இருக்குமோ?.

இருந்தாலும் இருக்கலாம். ஏனெனில் நானறிந்த வரையில் வாழ்க்கையில் அவருக்குள்ள ஒரே கவலை, அவரது வக்கீல் கோர்ட்டுக்கு வர வேண்டும் என்பதுதான். அதைத்தான் அவர் புட்டபர்த்தியில் வேண்டியிருப்பார். அதனை கொடுப்பதற்காக சாயிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும்!

எப்படியோ, சாய்பாபாவுக்கு நன்றி!

மதுரை
29/04/11

17.4.11

என்று நாம்?



நேற்று ஹால்மார்க் தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் கவனத்தை ஈர்த்தது. இடையில் சிறிதும், இறுதிக்காட்சியும்தான் பார்க்க இயன்றது. எனது அபிமான நடிகைகளில் ஒருவரான லிண்டா ஹாமில்டன் நடித்த படத்தின் கதை, அறுபதுகளில் நடைபெறுகிறது. 

அமெரிக்காவின் ஒரு அமைதியான குடியிருப்பு பகுதியில் (Neighbourhood) கணவன் குழந்தையுடன் வசித்து வருகிறார் லிண்டா. அக்குடியிருப்பபில் உள்ள வீடுகளை வெள்ளையர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி விற்பவரிடம் இருந்து, அடுத்த வீட்டினை வாங்கி அங்கு குடியேறுகிறார் ஒரு கறுப்பர்(coloured). இத்தாலியர் போல தோற்றமளிக்கும் அவர் தான் கறுப்பர் என்பதை மறைத்து வாங்குகிறார் என நினைக்கிறேன். அவரை அங்கிருந்து வெளியேற்ற வழக்கு தொடர வேண்டுமென்று குடியிருப்பிலுள்ள மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு லிண்டாவின் கணவர் பணிய வேறு வழியில்லாமல் லிண்டாவும் சேர்ந்து கையெழுத்திட நேரிடுகிறது. பின்னர் அந்த குடியிருப்பிலுள்ள மற்றவர்களின் கேலிப்பார்வைகளை மீறி எப்படி லிண்டா கறுப்பரின் மனைவியின் நட்பினை பெறுகிறார் என்பதும் இறுதியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கறுப்பர் வெளியேற வேண்டாமென்று உத்தரவிட உத்தரவினை கேள்விப்பட்டு அடுத்த வீட்டுக்கார கறுப்பு பெண்ணுடன் லிண்டாவும் சேர்ந்து எப்படிக் குதூகலிக்கிறார் என்பதுமாக படம் முடிகிறது. 

கதையென்று சொன்னேன் அல்லவா? இல்லை அமெரிக்காவில் உண்மையில் நடந்த வழக்கு இது. ஆனால், படத்தினை பார்க்கும் பொழுதே 'பாடல் இல்லை. காதல் இல்லை. உணர்வுபூர்வமான சம்பவங்களோ பெரிய திருப்பங்களோ இல்லை. ஆனால் திரைக்கதை எவ்வளவு இயல்பாக ஏதோ நாமும் அருகிலுள்ள வீட்டிலிருந்து நடக்கும் சம்பவங்களைப் பார்ப்பது போல எளிமையாக நகருகிறது. நம்மவர்களிடம் என்று இப்படி ஒரு படத்தினை எதிர்பார்ப்பது?' என நினைத்தேன்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான இனக்கவர்ச்சி தவிர வேறு பிரச்னைகளே நம்மிடம் இல்லையா? ஏன், நேற்று நான் பார்த்த திரைப்படத்தில் கையாளப்படும் பிரச்னை, கிராமப்புறங்களை விடுங்கள், இந்தியாவின் முதன்மை நகரங்களான சென்னையிலும், மும்பையிலும் இன்றும் நிலவுகிறது. எடுத்தாண்டு ஒரு திரைக்கதை அமைக்க முடியாதா?

இந்தப் பிரச்னையில் அமெரிக்க-இந்திய மக்களிடையேயான எண்ணப்பாட்டினை என்னால் ஒப்பிட இயலாது. ஆனால் இன்று உலகெங்கும் நாகரீகத்தை பரப்ப முன் வந்துள்ள அமெரிக்காவில் சட்டரீதியில் இனப்பிரிவுகள் பாதுகாக்கப்பட்டு வந்த காலகட்டத்திலே இந்தியா சட்டத்தினைப் பொறுத்து உயர்வான இடத்தை அடைந்திருந்தது. அதாவது, திரைப்படத்தில் கையாளப்பட்ட வழக்கு அதே காலகட்டத்தில் இந்தியாவில் தொடுக்கப்பட்டிருந்தால் அவ்விதம் வழக்கு தொடுத்தவர்களை அதன் காரணமாகவே தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்(1955) மூலம் தண்டனைக்கேதுவான குற்றவாளிகளாக்கியிருக்க முடியும். 

அவ்வளவு ஏன்? இந்தியாவில் எந்த காலக்கட்டத்திலும் ஒரு சொத்தின் உரிமையாளர் மீது அதை விற்றவரோ அல்லது மற்றவர்களோ ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவருக்கு அல்லது சேராதவருக்குதான் அந்த சொத்தினை விற்க முடியும் என்று வலியுறுத்த முடியாது. ஆனாலும் இங்கில்லையா அதே பிரச்னை?

சென்னையிலிருக்கையில், 'ஒவ்வொண்ணா முஸ்லீம்கள் இங்க வீடு வாங்கிட்டிருக்காங்க. நீங்கதான் நம்ம அசோசியேஷன் மூலம் ஏதாவது செய்யணும்' என்று புகார் செய்ய வந்தவரை அனுப்பி விட்டு, 'பாத்துட்டே இரு. நல்ல விலை கிடைச்சா, இவன்தான் முதல்ல விப்பான்' என்று புகார் செய்ய வந்தவர் மீது வெறுப்பு பொங்க கூறினார் எனது சீனியர். சென்னை தினப்பத்திரிக்கைகளின் வீடு வாடகைக்கு விளம்பரங்களைப் படித்தே ஒரு திரைக்கதை அமைக்க முடியாதா?

மும்பையில் இன்னும் மோசம். இங்குள்ள அடுக்கு மாடிவீடுகளில் குடியிருப்போர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சென்னையைப் போல அல்லாமல் அடிமனை மொத்தமாக சங்கத்தின் உரிமை. வீட்டு உரிமையாளர் சட்டரீதியில் உரிமையாளர் என்பதை விட சங்கத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்குகளின் உரிமையாளர். எனவே வீட்டினை விற்கையில் பங்கினை மாற்ற சங்கத்தின் அனுமதி தேவை. எனவே, பல சங்கங்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள், குஜராத்திகள் மற்றும் சரஸ்வட் பிராமணர்களின் சங்கங்கள் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவருக்குதான் வீட்டினை உரிமையாளர் விற்க வேண்டும் என்று சங்கவிதிகளில் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு மும்பை உயர்நீதிமன்றம் வரை சென்ற வழக்கில் 'இவ்வாறன விதிகள் பொது ஒழுங்கிற்கு (Public Policy) எதிரானவை. எனவே சங்க உறுப்பினர்களை இவை கட்டுப்படுத்தாது' என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இன்று கூட இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நிறைந்திருக்கும் கூட்டுறவு வீட்டுமனை சங்கங்களில் சேர்வது கடினம். ஆக நம்மிடம் இல்லையா கதைகளாக்கப்படக்கூடிய பிரச்னைகள்?


மும்பை
18.07.04

லா ஜோனா (LA ZONA) மற்றும் நகர ஊரமைப்பும்



தினகரனில், வாராவாரம் கே.என்.சிவராமன் என்பவர் உலக திரைப்படங்களைப் பற்றியும், ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களைப் பற்றியும் சுவராசியமாக எழுதுகிறார். ஏன், நமது தெலுங்கு, கன்னட மசாலாப் படங்களைப் பற்றியும் சுவராசியமான தகவல்களோடு தனியே எழுதுகிறார்.

சமீபத்தில் ‘லா ஜோனா (La Zona) என்ற மெக்ஸிகோ-அர்ஜெண்டினா கூட்டுத்தயாரிப்பில் உருவான ஸ்பானிய மொழி திரைப்படத்தைப் பற்றி சிவராமன் எழுதியதைப் படித்ததும் ஏற்ப்பட்ட உந்துதலில் அந்த படத்தைப் பார்த்தேன்.

முக்கியமான ஒரு சமூகப் பிரச்னையை பற்றிய ஆனால் ஒரு ‘திகில்படம் போல விறுவிறுப்பாக நகர்த்தப்படும் திரைக்கதை. இதே போன்றதொரு பிரச்னையை நாமும் இங்கு சந்தித்துக் கொண்டிருக்கையில், இன்னமும் காதல் சேற்றிலேயே விழுந்து கிடக்கும் நம்மவர்களை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது.

***

மேல் நடுத்தர வர்க்கத்தினர், ‘டவுன்ஷிப் என்ற பெயரிலும் ‘கேட்டட் கம்யூனிட்டீஸ்என்ற பெயரிலும் குட்டி நகரங்களை உருவாக்கி, பெருநகரங்களின் சேரிப்பகுதிகளிலிருந்தும் (Slums) பிற கீழ் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்தும் தங்களை பாதுகாக்கும் (Insulate) வண்ணம் , உயர்ந்த சுற்றுச் சுவர்களை எழுப்பி, வேறு யாரும் எளிதில் உள்ளே வராத வண்ணம் பாதுகாவலர் (Security) இன்ன பிற பந்தோஸ்பத்துகளுடன் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் சமூக அவலத்தை இந்தப் படம் பிரதிபலிக்கிறது.




சென்னையிலேயே சில சமயங்களில், நமது உறவினர்கள் அல்லது நண்பர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் முன்னர், பாதுகாவலர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையும், விசாரிப்பும் நம்மை சங்கோஜப்படுத்துகின்றன.

தென் அமெரிக்க நாடுகளைப் போல, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் விரிவடைய ‘லா ஜோனாபட நிகழ்வுகள், இங்கும் சகஜமாகலாம்.

சென்னையிலோ அல்லது பங்களூருவிலோ உள்ள மால்களை அண்ணாந்து பார்க்கும் வேலையற்ற சேரி இளைஞனின் மனதில் குற்ற எண்ணங்கள் தோன்றாமல் இருப்பது நாம் செய்த புண்ணியம்தான்!

***



லா ஜோனாக்கள் இங்கும் பெருமளவில் உருவாகி வருகிறது என்றாலும், அவை போன்ற குடியிருப்புகள் நமது நகர ஊரமைப்பு மற்றும் முனிசிபல் சட்ட விதிகளோடு முரண்படுபவை (Town and Country Planning Act/ District Municipalities Act etc.,)

இங்கு ஒரு குடியிருப்பு மனை உருவாக்க வேண்டுமாயின், அந்த லே-அவுட்டானது (Lay Out) நகர ஊரமைப்புத் துறையால் (Town & Country Planning Department) அங்கீகரிக்கப்பட வேண்டும். ‘பஞ்சாயத்து அப்ரூவ்டுஎன்பதெல்லாம் சும்மா. பஞ்சாயத்துகளுக்கு லே-அவுட் அங்கீகரிக்கக் கூடிய எவ்வித அதிகாரமும் கிடையாது. ஏன், மாநகராட்சிக்கே கிடையாது.

நகர ஊரமைப்புத் துறை ஒரு லே-அவுட்டை அங்கீகரிக்கையில், அதன் விஸ்தீரணத்தைப் பொறுத்து குறிப்பிட்ட அளவிற்கு குறையாமல் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் சாலைகளை சம்பந்தப்பட்ட மாநகராட்சிக்கோ அல்லது நகராட்சிக்கோ கொடையளிக்க (Gift) கேட்கலாம். அப்படி கொடையளித்தால்தான் நகராட்சியில் அந்த குடியிருப்பில் கட்டிடம் கட்ட அனுமதி தருவார்கள். இல்லையெனினும், நகராட்சி சட்டத்தில் பொது வீதி (Public Street) என்பதற்கான விளக்கத்தில், ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலைகளும் அடங்கும்.

அதே போன்று ஒரு குடியிருப்பில் அமைக்கப்படும் சாலையானது, அதற்கு அடுத்ததாக அமைக்கப்படும் குடியிருப்புப் பகுதியின் சாலையோடு இணைக்கப்பட வேண்டும். இதன் நோக்கம், இவ்வாறு ஒவ்வொன்றாக அமைக்கப்படும் லே-அவுட்கள் சாலைகளால் இணைக்கப்பட்டு ஒழுங்கான ஒரு நகரம் அமையும் என்பதுதான்.

ஆனால், இங்கு குடியிருப்பின் சுற்றிலும் சுவர் எழுப்பி சாலைகளை மறித்து விடுகின்றனர். இவ்வாறு மறிப்பது விதி மீறல் என்பது என கருத்து.

சரி, சாலைகளை மறிக்காமல் கதவு (Gate) அமைத்து, வெளியாட்களை உள்ளே நுழையாமல் தடுக்கலாமா என்றால், அதுவும் விதி மீறல்தான். ஏற்கனவே கூறியபடி அமைக்கப்படும் சாலைகள் பொது சாலைகள் என்றுதான் கருதப்பட வேண்டும். எனவே, இன்னார்தான் அந்த சாலையில் நடக்க முடியும் என்று கட்டுப்படுத்த முடியாது.

ஆயினும், சுற்றிலும் சுவர் எழுப்பி கூடவே கதவையும் பூட்டி வைக்கும் குடியிருப்புகள் பெருந்கரங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தனிமனிதப் பாதுகாப்புக்கும், பொதுவான மனித உரிமைக்கும் இடையேயான போராட்டம். 

என்றாவது ஒருநாள் நீதிமன்றங்கள் இந்தப் போராட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம்!

மதுரை
17/04/11

14.4.11

தமிழ்மணத்தின் முன்னோடி!

தமிழ்மணத்தின் முன்னோடி!


தமிழில் வலைப்பதிவுகள் பெருவாரியான அளவில் எழுதத்தொடங்கிய காலத்தில், இப்போதுள்ள தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இல்லாத சூழ்நிலையில், வலைப்பூ என்ற கூட்டு வலைப்பதிவு தன்னார்வம் கொண்ட பதிவர்களால் நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு வாரமும் யாரவது ஒருவர் ஆசிரியர்கள் என்ற வகையில் மற்ற பதிவுகளை அறிமுகப்படுத்தி வந்தனர். நான் அப்பொழுது வலைப்பதிய ஆரம்பிக்கவில்லையெனினும், ஆசிரியராக ஒருவாரம் நியமிக்கப்பட்டு சில பதிவுகளை அறிமுகப்படுத்தினேன்.

அப்பொழுது (28/03/04) நான் எழுதிய ‘விதி தன்னைப் படைக்கட்டும்என்ற ஒரு பதிவினை இணையத்தை மேய்கையில் படிக்க நேர்ந்தது. வலைப்பூ தற்பொழுது இல்லை என்பதால் ஆவணமாக அதனை சேமிக்கும் வண்ணம், இங்கு தனிப்பதிவாக...


வணக்கம், 

தொண்ணூறுகளின் இறுதியிலும் பின்னரும் இந்தியாவில் மென்பொருள் தொழில் அசுர வளர்ச்சியடைந்ததற்கு காரணம், 'மென்பொருள் தொழில் வளர்ச்சிக்கென நம் அரசிடம் ஒரு அமைச்சகம் இல்லை' என்று பிரமோத் மஹாஜன் வேடிக்கையாக குறிப்பிடுவார். எனினும் அதில் ஒரு உண்மை இருக்கிறது. அது போலவே வலைப்பதிவென்பது இதுதான், என்று கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு பலரும் இத்தனை ஆர்வத்துடன் பங்கெடுத்து...வலைப்பூக்கள் இத்தனை வளர்ச்சியடைந்திருக்குமா என்பது கேள்விக்குறி!
 
முதலில் முட்டை முழுதாக உடைந்து கோழிக்குஞ்சு வெளிவரட்டும். பின்னர் அதன் தன்மை அறிந்து பெயர் வைக்கலாம். அது போலவே, பலரும் பல கோணங்களில் இவற்றை பயன்படுத்தட்டும். வெல்பவை விதியாக தன்னாலாயே மாறும். பலரின் பாராட்டினையும் பெற்ற பத்ரியின் 'எண்ணங்கள்' அவ்விதமான சில விதிகளை படைக்கும் என்பது என் அனுமானம். அவை எளிமை மற்றும் நிலைத்தன்மை. தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில், பத்ரி நல்ல ஒரு திட்டமிடலுடனும், தெளிவான ஒரு நோக்கத்துடனும் தனது வலைப்பதிவினை முன்னெடுத்துச் செல்வதாக என்னால் கூற முடியும். மேலும், பத்ரி 'தனது வலைப்பதிவானது வழக்கமாக இணையத்தில் வலம் வரும் நடுத்தர, மேல் நடுத்தர இளைஞர் பட்டாளத்தைக் கடந்து விரைவில் ஏற்படவிருக்கும் இணையத் தொடர்புப் புரட்சியின் துணை கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் சாதாரண மக்களைச் சென்றடைந்து....இதன் மூலம் ஒரு சமூக, அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு பொதுக்கருத்தினை உருவாக்கும் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவராக தெரிகிறார். அதற்குத் தேவை நல்ல தமிழ். தோற்றத்தில் எளிமை. நிலைத்த தன்மை. நிலைத்த தன்மை என்பது தொடர்ந்து அங்கு பதியப்படும் பதிவுகள் அனைத்துமே பெரும்பாலும்...நான் கூறிய அந்த நோக்கத்தினை நோக்கிய செயல்பாடுகளாகவே இருப்பது.
 

இவ்வகையான நிலைத்த தன்மைக்காக பலர் மெனக்கெடுவது புரிகிறது. இதன் காரணமாகவே, ஒருவரே பல வலைப்பதிவுகளை வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு வலைப்பதிவினையே இதோ என்னைக் கவர்ந்த பெண்களைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நம்மையெல்லாம் கிடப்பில் போட்டுச் சென்ற நம்ம பாலாஜி பாரிபோன்றவர்கள் இருக்கையில், மூன்று நான்கு வலைப்பதிவுகளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? (பாரியின் உறுமி மேளம் மறுபடி உறுமத் தொடங்கி விட்டது. தனது மதிப்பிற்குறிய கோமதி டீச்சரைப் பற்றி ஆரம்பித்தவர், ஆரம்பித்த வேகத்திலேயே தொடரும் போட்டிருக்கிறார்)
 

இவ்விதமான மல்ட்டி டைமன்ஷனல் வலைப்பதிவுகளில் ஏழு பதிவுகளுடன் முதலிடத்தில் இருப்பவர்  சந்திரவதனா. 'படித்தவை' என்று ஒரு பதிவிருப்பதால் அவரது பதிவுகளில் எதைப் பற்றி எழுதுவது என்பதில் சிரமமிருக்கவில்லை. முள்ளுக்கம்பிகளுக்கு பின்னே மகனை அணைத்தபடி இருக்கும் ஈராக் போர்க்கைதியின் படம் உள்ளத்தை உருக்குகிறது. ஆனாலும் பெரும்பாலோனார் ஏற்கனவே இப்படத்தை பார்த்திருக்கலாம். பெண்ணென்று பூமிதனில் என்று ஒரு சுட்டி! சொடுக்கினால் மு.பொன்னம்பலன் என்பவரின் வலைப்பதிவில் பதிந்துள்ள அமிர்தானந்தமாயி அம்மாவின் உரை! புதிதாக அந்த உரையில் ஏதும் கூறியிருப்பதாக தெரியவில்லை. அடுத்து முஸ்லீம் சமூகத்தினை சேர்ந்த ஜுனைதா பேகம் என்ற எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை.... ஆச்சரியமான தகவல்கள். முக்கியமானது பெரும் புகழ் பெற்ற எழுத்தாளரான இவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரைதானாம். 


பின்னர் சில புகைப்படங்கள் இருக்கின்றன. புகைப்படக்காரர் சந்திரவதனா இல்லை என்பது புரிகிறது. ஆனாலும், ஏன் இப்படங்கள் இவரை பாதித்தது, அல்லது ஏன் இவர் இவற்றை ரசித்தார் என்று மனதை சற்று திறந்து வைத்திருந்தாரானால்.....வலைப்பதிவு மேலும் அர்த்தமுள்ளதாயிருந்திருக்கும். 


"
ஆர்கைவ்" கிடங்கின் இடையே தோண்டினால் திறந்த பக்கத்தில் சிறுமியின் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக பண உதவி வேண்டும் புகைப்படத்துடன் அறிவிப்பு. சிறுமிக்கு வேண்டிய உதவி இதற்குள் கிடைத்திருக்கட்டும். நடுத்தர் குடும்பத்தை சேர்ந்த பலர் இன்னமும் இறந்தகாலத்திலேயே இருக்கிறார்கள். ஒரு சாதாரண இரத்த சோதனைக்கே ஆயிரம் ரூபாய் வரை மும்பையில் கேட்கிறார்கள். எந்த ஒரு அறுவை சிகிச்சையானாலும் சாதாரணமாக ஐம்பதாயிரம் ஆகிறது. இனி மருத்துவ காப்பீடு செய்து கொள்வது இங்கும் வளர்ந்த நாடுகளைப் போல அவசியம் என்பதை நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்களே உணர மறுக்கிறார்கள். வருடம் சுமார் ஐயாயிரம் ரூபாய் போனால் போகிறது....மருத்துவ செலவு என்று வந்தால் யாரிடமும் சென்று நிற்க வேண்டாம் என்ற மன நிம்மதிக்காக இந்த விலையை கொடுப்பதில் தவறில்லை.
 

நான் சிறுவனாக இருக்கையில் தனியார் மருத்துவ மனைகளில் 'இது சிக்கலான கேஸ். நீங்க பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்க' என்று கூறுவார்கள். பெரிய ஆஸ்பத்திரி என்பது அரசு மருத்துவமனைகள். நான் வீட்டிலும் எனது தங்கை அரசு மருத்துவமனையிலும் பிறந்தோம். இப்போது அரசு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்வதை நினைத்துப் பார்க்க இயலுமா? நமது பொருளாதார நிலை உயர்ந்து விட்டது என்பதை விட அரசு மருத்துவமனைகளின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது என்பதுதான் காரணம். 7000 கோடி ரூபாய்க்கு ஒரு பொம்மைக் கப்பலை வாங்க ஏழை மக்கள் கொடுக்கும் 
விலை, மருத்துவ வசதியின்மை!!!
 

வருமான வரி கட்டுபவர்களுக்கு சிறையில் முதல் வகுப்பு கொடுக்கிறார்கள். ஆனால், இவ்வாறான மருத்துவ உதவி தேவைப்படும் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு அறையாவது கொடுக்கலாம் அல்லவா? வருமான வரி கட்டவும் பலர் முன் வரலாம். ஹ¥ம்.... 


அன்புடன் 
பிரபு ராஜதுரை

முக்கியமாக, இன்றுள்ள தமிழ்மணத்திற்கு முன்னோடி இந்த வலைப்பூதான் என்று நினைக்கிறேன். ஏனெனில் தமிழ்மணம் காசிதான் இதில் முக்கிய பங்காற்றி வந்தார். எனக்குத் தெரிந்த மற்றொருவர் சந்திரமதி. துறை ரீதியிலான கூட்டு வலைப்பதிவுகள் தொடங்கப்படவேண்டும் என்ற ரீதியில் நான் கூறிய சில கருத்துக்களை முன் வைத்து, காசி அவர்கள் பின்னர் எழுதிய வலைப்பதிவு, தமிழ்மணத்திற்கான சில சமிக்ஞைகளை காண்பிக்கிறது.

ஆனால், வர்த்தக ரீதியில் தற்பொழுது அபரிதமாக வளர்ந்துள்ள தமிழ்மணம் அதன் பாசாங்கற்ற தன்மைகள் மறைந்து, மிகவும் அந்நியப்பட்டது போல தோற்றமளிக்கிறது.

வளர்ச்சிக்கான விலை?

மதுரை
15/04/11

10.4.11

பத்திரமில்லாமல், சன் டிவி கட்டிடமா?

உண்மைத்தமிழன் என்ற பதிவரின் ‘பத்திரமே இல்லாத இடத்தில் சன் டிவி அலுவலகம்’ என்ற கட்டுரையில் பத்திரப் பதிவு பற்றி எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து சில விளக்கங்கள் அவசியம் என்று நினைக்கிறேன்.

ஒரு காலி மனையை விலைக்கு வாங்கும் நபர், தான் கிரயம் பெறும் தொகையைத்தான் பத்திரத்தில் குறிப்பிட வேண்டுமே தவிர பத்திரப் பதிவு அலுவலங்களில் வைத்திருக்கும் வழிகாட்டு மதிப்பினை (Guideline Value) அல்ல.

உதாரணமாக, வழிகாட்டு மதிப்பீடு ரூ.100/- என்று இருப்பினும், சொத்தின் விலை ரூ.75/- கூட இருக்கலாம். அப்படியிருப்பின் பத்திரத்தில் ரூ.75/- என்று குறிப்பிடாமல் ரூ.100/- என்று குறிப்பிடுவது தவறாகும். அப்படி கொடுத்தால், கொடுக்காத ரூ.25/-க்கு வருமான வரியிடம் பொய்கணக்கு தாக்கல் செய்ய வேண்டி வரும். வாங்கியவரும் வாங்காத ரூ.25/-க்கும் சேர்த்து காப்பிட்டல் கெயின் வரி கட்ட வேண்டும். ஒருவேளை அதே சொத்தை ரூ.125க்கு கிரயம் பெற்றால், அந்த தொகையைத்தான் குறிப்பிட வேண்டுமேயொழிய ரூ.100/- என்று குறிப்பிடக் கூடாது. அப்படி செய்வது வருமான வரித்துறையோடு பத்திரப்பதிவுத் துறையினையும் ஏமாற்றுவதாகும்.

எனவே சன் டிவி நிறுவனம் சொத்தினை ரூ.11.70 கோடிக்கு கிரயம் பெற்றால் அந்த தொகையை குறிப்பிடாமல் வழிகாட்டு மதிப்பான ரூ.16.87 கோடி என்று குறிப்பிட முடியாது. அப்படி செய்வதுதான் மோசடி!

***
வழிகாட்டு மதிப்பீடு என்பதற்கு எவ்விதமான சட்டரீதியிலான அங்கீகாரம் கிடையாது. பத்திரப்பதிவு அலுவலர்கள், சொத்தின் மதிப்பினை தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பது இல்லை என்பதால், அவ்வப்பொழுது ஏற்படும் கிரயங்களின் மதிப்பினை வைத்து நிர்ணயித்து, பத்திரப்பதிவு அலுவலங்களில் வைத்திருப்பார்கள். அவ்வளவுதான்.

உங்களது கிரயப்பத்திரத்தில் நீங்கள் குறிப்பிடும் தொகையானது, ரூ.125/- என்றால் அலுவலர் அதற்கான முத்திரைக் கட்டணத்தை பெறுவார். ஆனால் ரூ.75/- என்றால், ‘சந்தை மதிப்பு ரூ.100/-. அதற்கான கட்டணத்தைக் கட்டவும்’ என்று கோருவார். நீங்கள் மறுத்தால், அதனை கட்டாயப்படுத்தி வாங்க அவருக்கு அதிகாரம் கிடையாது. உண்மையான சந்தை விலை என்ன என்பதை நிர்ணயிக்க அதற்கென உள்ள அதிகாரியிடம் பிரச்னையை அனுப்பி வைப்பார்.

பிரச்னையை தவிர்க்க வேண்டி, நீங்கள் ரூ.100/-க்கான முத்திரைக் கட்டணத்தை செலுத்த சம்மதிக்கலாம். ஆனால், பத்திரத்தில் உண்மையான கிரயத் தொகையான ரூ.75/- என்றுதான் குறிப்பிட வேண்டும்.

உங்களுக்கு சம்மதமில்லை என்றால், சந்தை மதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரி, வழிகாட்டு மதிப்பை வைத்து சந்தை விலையை நிர்ணயிக்க இயலாது. அந்த சொத்தின் சாதக பாதங்கள் அதன் அருகே உள்ள சொத்துக்கள் சமீபத்தில் விற்கப்பட்ட தொகை என்ற அம்சங்களைக் கொண்டு நிர்ணயிக்க வேண்டும்.

முக்கியமாக, இவ்வாறு சந்தை மதிப்பு விசாரணையிலிருப்பினும், பத்திரப்பதிவினை மறுக்கக் கூடாது. பத்திரமானது பதிவு செய்யப்பட்டு தாமதமின்றி உங்களிடம் வழங்கப்பட வேண்டும். அந்தப் பத்திரத்தில், இவ்வாறு சந்தை மதிப்பிற்காக விசாரணை நிலுவையிலுள்ளது என்பதை குறிப்பிட்டு சொத்தினை வாங்கியவரிடம் பத்திரத்தை கையளிக்க வேண்டும் என்று பல்வேறு முறை நமது உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறினாலும், பத்திரப்பதிவு அலுவலர்கள் பத்திரத்தினை திருப்பி வழங்குவதில்லை.

சன் டிவி நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு தாக்கல் செய்தால், உடனடியாக பத்திரத்தினை அவர்களிடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிடும் வாய்ப்புகள் அதிகம்.

***
டான்சி வழக்கில் பத்திரப்பதிவு அலுவலர், வழிகாட்டு மதிப்பிற்கும் குறைவாக பத்திரத்தில் குறிப்பிட்ட தொகையினை ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொண்டார். எந்தவொரு பத்திரப்பதிவு அலுவலரும் அவ்வாறு ஏற்றுக் கொள்வதில்லை சன் டிவி விவகாரத்தில் ஆட்சேபிக்கப்பட்டுள்ளது. எனவே டான்சி வழக்கோடு இதனை ஒப்பிட முடியாது!

இறுதியாக, ‘பதிவு ஆவணமே இல்லாத இடத்தில் எப்படி கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்தது’ என்ற கேள்வியும் அர்த்தமற்றது. முத்திரை கட்டண பிரச்சனையில் ஒரு கிரயப் பத்திரம் முடங்கியுள்ளது என்பதற்காக, அந்த சொத்தில் ஒருவர் கட்டிடம் கட்டக்கூடாது என்பது கிடையாது. சொத்தை கிரயம் பெறாமலேயே, அதன் உரிமையாளரின் அனுமதியைப் பெற்று கட்டிடம் கட்டலாம். கிரயப் பத்திரம் கையெழுத்திடப்பட்ட அன்றே சன் டிவி நிறுவனம் சொத்தின் உரிமையாளர்கள் என கருதப்படுவர். எனவே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

சொத்தின் சந்தை மதிப்பு எவ்வளவு என்ற பிரச்சினையை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லலாம். அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கலாம். அந்த வழக்கு சன் டிவி நிறுவனத்துக்கு பாதகமாக அமைந்தால் கூட, அந்த சில லட்சங்களுக்காக பல கோடி மதிப்புள்ள சொத்தினை முடக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.

முத்திரைக் கட்டண பாக்கி என்பது சொத்தின் மீதுள்ளமுதலாவது சார்ஜ். அதாவது அந்த சொத்து யார் கையில் இருந்தாலும், அதனை விற்று பாக்கியை வசூலித்துக் கொள்ளலாம். எனவேதான், அந்த சொத்தினை அதற்குப் பிறகு வாங்குபவர்களை இப்படி ‘ஒரு விசாரணை நிலுவையில் உள்ளது’ என்று எச்சரிக்கவே, பத்திரத்தினை திருப்பிக் கொடுக்கையில் அதனை குறிப்பிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு கூறியுள்ளன.

மதுரை
100411